அனைருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! நண்பர் விஸ்வாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் வந்திருக்கிறேன். பதிவிடுகிறேன் பேர்வழி என்று நானும் களத்தில் குதித்து விட்டாலும் அதனை தொடர்ந்து செய்ய முடியாத ஒரு சூழல் எனக்கு. ஆனாலும், என்னைவிட பரபரப்பான ஒரு சூழலில் பணி புரிந்தாலும் அவ்வபோது அருமையான பதிவுகளை இட்டு எழுத்தில் மட்டுமல்ல செயலிலும் “கிங்” என்பதை உணர செய்திருக்கும் நண்பர் விஸ்வாவிற்கு ”தமிழ் காமிக்ஸ் உலகத் தலைவன்” என்ற பட்டத்தை அளிக்க காமிக்ஸ் உலக மக்கள் முடிவு செய்துள்ளார்கள் என்பதை இந்த சந்தர்ப்த்தில் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தெரிவித்து கொள்கிறேன். வாழ்க தமிழ் காமிக்ஸ் உலகத் தலைவன்! (தமிழினத் தலைவர் உங்கள் நினைவிற்கு வந்து நீங்கள் கடுப்பனால் அதற்கு நான் பொறுப்பல்ல!)
சமீபத்தில் வாண்டுமாமாவின் இரண்டு சித்திரக் கதைகளை படித்தேன். ஒன்று மரகதச் சிலை மற்றொன்று ரத்தினபுரி ரகசியம். இரண்டு கதைகளையும் கங்கை புத்தக நிலையத்தார் (+(91)-(44)-24342810, 24996344, No 13, Opp To Pondy Bazaar Post Office, Deenadayalu Street, T Nagar, Chennai - 600017) ஒரே புத்தகமாக வெளியிட்டுள்ளனர். இந்த பதிவில் மரகதச் சிலையை பற்றி பார்க்கலாம்.
மன்னர் ருத்ரசிம்மரின் மகளை காளிக்கு பலியாக்க நினைக்கும் மந்திரவாதி நீலகேசியின் கோரிக்கையை மன்னரும் இளவரசர் ஆனந்தனும் எதிர்க்கிறார்கள். அவர்களை மந்திரப் பொடியால் மரகதச்சிலைகளாக்கி தூக்கிச் செல்கிறான் மந்திரவாதி நீலகேசி. இளவரசி நிர்மலா அவர்களை காப்பாற்றும்படி மகேந்திரபுரி மன்னர் மன்மதவர்மரிடம் கேட்டுக்கொள்கிறாள். அவரது மகன் இளவரசன் ஆதித்தன், நிர்மலா மற்றும் காளி என்ற குள்ளனுடன் சேர்ந்து மந்திரவாதி நீலகேசியை தேடிச் செல்கிறான்.
வழியில் எதிர்படும் டைனோசரை வென்று பயணத்தை தொடரும் ஆதித்தன் குழுவை வயோதிகர் வடிவில் வரும் மந்திரவாதி நீலகேசி எதிர்கொள்கிறான். நிர்மலாவை காட்டின் ஏதோ ஒரு இடத்தில் விட்டு விட்டு அவளது இடத்தில் மாயா மோகினியை நடிக்க சொல்கிறான். மோகினியும் ஆதித்தனை பலவாறு கேலி செய்து வெறுப்பேற்ற அவன் அவளை விட்டு விட்டு சென்று விடுகிறான். இதற்கிடையில் மந்திரவாதியின் மகள் நாகநந்தினி ரூபமதி என்ற பெயரில் ஆதித்தனுடன் வஞ்சமாக பேசி அவனை அலைகழிக்கிறாள். அவளிடம் மயங்காத ஆதித்தனை மந்திரபொடி நீரை பருக செய்து பலகீனம் அடைய செய்கிறாள். ரூபமதியை விட்டு விலகிய ஆதித்தனை மலைவிழுங்கி என்ற அரக்கன் எதிர்கொள்கிறான். ரூபமதியால் தூண்டப்பட்ட அவன் பலகீனமான ஆதித்தனை சிறைப்பிடிக்கிறான்.
இதற்கிடையில் மயக்கம் தெளிந்த நிர்மலாவை சிங்கம் ஒன்று பாதுகாக்கிறபோது ஆதித்தனின் வடிவில் உள்ள நீலகேசி வருகிறான். ரூபமதி அனுப்பிய வேங்கை மார்பனின் உதவியுடன் சிங்கத்தை கொன்று நிர்மலாவை சிறைபிடிக்கும்போது மனித தலையும் குதிரை, ஆடு, மான் ஆகியவற்றின் உடலுடன் கூடிய ஒரு விநோத கூட்டத்தினாரால் நிர்மலா காப்பாற்றப்படுகிறாள்.
ஒரு நாள் அழகிய ஓர் இளவரசன் பத்மநாபன் வந்து நிர்மலாவை தன்னுடன் கூட்டிசெல்கிறான். வழியில் காளியை சந்திக்கும் இவர்கள் ஆதித்தனை சிறை மீட்கச் முயற்சிக்கிறார்கள். மலைவிழுங்கி மற்றும் ஏழுதலை நாகத்தின் பாதுகாப்போடு உள்ள ரூபமதியுடன் போராடி அவர்களை வெல்லும் பத்மநாபன், காளி கூட்டணி இறுதியில் ஆதித்தனை சிறைமீட்கிறது. ரூபமதி தனது உண்மை நிலையான கிழ ரூபத்தை அடைந்து தோற்றோடி விடுகிறாள்.
நிர்மலா தன்னை விட்டு பத்நாபனுடன் சிரித்து பேசி மகிழ்வதை கண்டு பொறாமை கொண்ட ஆதித்தன் அவனை போருக்கு அழைக்கிறான். அப்போதுதான் இதுவரை பத்நாபன் வேடத்தில் இருந்தது குந்தள நாட்டு மன்னர் குபேரவரின் ஒரே மகளான இளவரசி பத்மினி என்று தெரியவருகிறது. அவளது கனவில் கண்ட கட்டழகு இளவரசனை மணம் புரிய வேண்டி தேச சஞ்சாரம் செய்து வரும்போதுதான் நிர்மலாவை கண்டு உதவியதாக தனது கதையை சொல்கிறாள்.
பிறகென்ன, ஆதித்தன் இரண்டு இளவரசிகள் மற்றும் குள்ளன் காளியுடன் தனது தேடல் பயணத்தை மீண்டும் தொடருகிறான். ஒரு குகையின் வழியே சென்று முனிவர்கள் தவம் செய்யும் பர்ணசாலையை அடைகிறார்கள். அங்கே ஒரு முனிவர் நீலவேணி என்ற பறக்கும் குதிரையை வெற்றி கொண்டால் மந்திரவாதி நீலகேசியை அழிக்கலாம் என்று கூறுகிறார்.
இளவரசிகளை பர்ணசாலையில் விட்டு விட்டு காளியுடன் சென்று நீலவேணி குதிரையை அடிமை கொள்கிறான் ஆதித்தன். பிறகு இளவரசிகளை தன்னுடன் கூட்டிக்கொண்டு பறக்கும் குதிரையில் மந்திரவாதியை தேடிச் செல்கிறான். இவர்களின் வருகையை மாயக்கண்ணாடியில் பார்க்கும் மந்திரவாதி தான் வளர்க்கும் யாழிமுக சிங்கம் என்ற கொடிய மிருகத்தை அவர்களின் மீது ஏவி விடுகிறான். பாம்பை தனது வாளாக கொண்ட, நெருப்பு கக்கும் அந்த மிருகத்தை இளவரசி பத்மினி, காளி இவர்களின் துணையுடன் கொல்கிறான் ஆதித்தன். உயிர்நிலையான யாழி மிருகம் இறந்தபோது மந்திரவாதி நீலகேசியும் இறந்து போகிறான். ஆனால், இப்போராட்டத்தில் குள்ளன் காளி மரணமடைய நேரிடுகிறது.
மரகச்சிலைகளை தேடி கண்டறிந்தபின், அவர்களின் மேல் நீலகேசியின் இரத்தத்தை தெளிக்க நிர்மலாவின் தாய், தந்தை மற்றும் சகோதரன் ஆனந்தன் ஆகியோர் உயிர் பெற்று எழுகிறார்கள்.
தனது கனவில் கண்ட கட்டழகன் ஆனந்தனே என்பதை அறிந்த இளவரசி பத்மினி நாணம் கொள்ள அவளை தனது அண்ணனின் கரம் பற்ற செய்கிறாள் இளவரசி நிர்மலா. தனது மகள் நிர்மலாவை மணம் செய்ய வேண்டுகிறார் மன்னர் ருத்ரசிம்மர். அப்புறமென்ன சுபம்தான்!
இயல்பான ஒரு மன்னர் காலத்து மந்திரத் தந்திர கதை போல தோன்றினாலும் உலகின் பல்வேறுபட்ட புராண கதைகளில் இருந்தும் சில புனைவுகளை வாண்டுமாமா இக்கதையில் கையாண்டிருப்பது கதைக்கு மெருகூட்டுகிறது.
நமது கோயில்களில் உள்ள யாழி சிலையை நாம் அனைவரும் பார்த்திருப்போம். அதன் புராணப் பின்னணி என்ன என்பது நம்மில் பெரும்பான்மையினருக்கு தெரியாது. இந்த யாழியையும் சீனா புராணக் கதைகளில் வரும் டிராகனையும் இணைத்து ஒரு புது வித உருவத்தை உருவாக்கியிருக்கும் வாண்டுமாமாவின் கற்பனையே கற்பனை.
கதையின் தொடக்கத்தில் வரும் டைனோசர், ஆதித்தன் போரிட பயன்படுத்தும் முற்பந்து, மலைவிழுங்கி அரக்கன் போன்ற படைப்புகள் எல்லாம் தான் அறிந்தவைகளை இயல்பான ஒரு கதையோட்டத்தில் ஒருங்கிணைக்கும் வாண்டுமாமாவின் திறனை வெளிபடுத்துகின்றன.
இக்கதையில் வரும் நீலவேணி என்ற பறக்கும் குதிரை, மான், குதிரை மனிதர்கள் போன்றவை கிரேக்க புராணக்களின் புனைவுகளை நமக்கேற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்ட படைப்புகளே ஆகும். இவற்றோடு ஏழுதைலை நாகம், மந்திரக்கண்ணாடி போன்ற நமது கலாச்சாரத்திற்கே உரிய புனைவுகளும் உரிய முறையில் கையாளப்ப்பட்டுள்ளன.
இந்த கதையை இப்போதுதான் படித்தேன். ஆனாலும், நன்றாகத்தான் இருக்கிறது. இதே கதையை சிறுவயதில் படித்திருந்த்தால் நிச்சயமாக ஒரு மகத்தான சுவராஷ்யத்தை உணர்ந்திருப்போம். தமிழின் திறமையான கதைசொல்லியான வாண்டுமாமாவை பற்றி நிறையவே அறிந்திருந்தாலும் ஒரு பதிப்பகத்தார் அவர் மீது கொண்டுள்ள மதிப்பை இந்த விவரக்குறிப்பின் மூலம் அறியலாம்.
தமிழ் காமிக்ஸ் கதைகளை உருவாக்குவதிலும், கதைகளுக்கேற்ற சித்திரங்களை வரைய ஓவியர்களை உற்சாகப்படுத்துவதிலும் வாண்டுமாமா ஒரு முன்மாதிரியாக விளங்கினார். மரகதச்சிலைக்கு ஓவியர் ரமணி சித்திரம் வரைந்துள்ளார். சித்திரங்கள் சுமார் என்ற வகையில் இருந்தாலும் மன்னர் காலத்து மந்திரவாதி கதைக்கு பொருத்தமாக உள்ளன.
பதிப்பகத்தாரின் கங்கையுரையில் ஒரு முக்கியமான விஷயம் சொல்லப்பட்டுள்ளது. அதுதான் வாண்டுமாமாவின் சித்திரகதைகளுக்கு ஓவியம் வரைபவர்கள் மேம்போக்காக முகங்களை மட்டும் வரையாமல் பின்புலக் காட்சிகளுடன் வரைகிறார்கள் என்பதே அது. எந்த அளவு உண்மை என்பதை கதையை படிக்கும் போது நம்மால் உணர முடியும்!




