'
வேதாளம் முருங்கை மரம் ஏறிடிச்சு!', '
சற்றும் மனம் தளராத விக்கிரமாத்தன் போல..!', '
சரியான அம்புலிமாமா கதையாயிருக்கு!'
போன்ற சொற்றொடர்கள் தமிழக வெகுஜனங்களால் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கண்ட சொற்றொடர்களின் பிரபலத்திற்கு காரணம் அம்புலிமாமா!
கடந்த 61
வருடங்களாக தமிழக குழந்தைகளுக்கு தளராது சேவை செய்து வரும் சிறுவர் மாத இதழ்.
தமிழக குழந்தை இலக்கிய வரலாற்றில் மிக நீண்ட காலமாக அம்புலிமாமாவின் இந்த சாதனை முறியடிக்கப்படவேயில்லை. அதற்கான வாய்ப்புகளும் இனி இல்லை. ஏனெனில்
அம்புலிமாமா தற்போது நவீனமயமாக்கபட்டுள்ளது. எழுத படிக்க தெரிந்த பெரும்பாலான தமிழர்களுக்கு அம்புலிமாமாவை படிக்கும் வாய்ப்பு ஒருமுறையேனும் கிட்டியிருக்கும்.
எங்கிருந்துதான் இவர்களுக்கு கதைகள் கிடைக்கின்றனவோ என்று வியக்கும் அளவுக்கு எண்ணிலடங்கா கதைகளை வெளியிட்டு கொண்டேயிருக்கிறார்கள்.
புராணம், பஞ்ச தந்திரம், நாட்டுப்புறக்கதைகள், அயல்நாட்டு கதைகள், பறவை, விலங்கு கதைகள், மாயாஜால கதைகள், இதிகாசங்கள் என அம்புலிமாமாவில் வெளிவராத கதைகளே இல்லை எனலாம்.
பெரும்பாலும் சிறுவர் பத்திரிகைகளில் ஒரு கதைக்கு ஒரு படம் மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் அம்புலிமாமாவில் ஒரு பக்கத்திற்கு ஒரு படம் வீதம் அதுவும் வண்ணத்தில் வெளியிடுவார்கள். சித்திரங்களின் தரம் கண்ணில் ஒற்றிகொள்ளும் படி அற்புதமாக இருக்கும். எனது நினைவுகளின் படி சங்கர் என்பவரின் ஓவியங்கள் அம்புலிமாமாவின் பிரிக்க முடியாத அங்கமாகவே இருக்கின்றன.
1947 - ஜூலை மாதம் முதல் அம்புலிமாமா வெளிவந்தது. சுதந்திரம் தொடர்பான பிரச்சனைகள் உச்சத்தில் இருந்த காலக்கட்டம். புதிய இந்தியாவில் என்னென்ன மாற்றங்கள், கட்டமைப்புகள் செய்யப்பட வேண்டும் போன்ற விவாதங்கள் சூடுபிடித்த நேரம் அது. ஒரு நாட்டின் வருங்கால தூண்கள் தற்கால குழந்தைகள்தான். அவர்களுடைய குழந்தைப் பருவம் குதூகலமாக, வண்ணமயமாக, வளமான கற்பனைகளுடன், எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன், தேசப்பற்றுடன் அமைய வேண்டும். இந்த உயரிய நோக்கத்தை நிறைவேற்றும் வண்ணமே நாகி ரெட்டி, சக்கரபாணி ஆகிய நற்சிந்தனையாளர்களால் அம்புலிமாமா தொடங்கப்பட்டது.
அச்சுத்துறையின் வளர்ச்சிக்கு முன்னர் நிலவொளியில் சிறுவர்களுக்கு கதை சொல்லும் புராதான வழக்கமே இருந்தது. எனவே கதை சொல்லுதலை நிலவுக்கு தொடர்புப் படுத்தி அம்புலிமாமா (நிலவு) என்று பெயரிடிருக்கலாம் என்பது எனது எண்ணம். முதல் இதழின் சில பகுதிகளை பார்ப்போம்.
அட்டை: 165 x 215 மில்லி மீட்டர் அளவு கொண்ட பல வண்ண அட்டை. ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், அந்த காலத்திலேயே அடிப்படை வண்ணங்களுடன் கூடுதலாக வெள்ளி (சில்வர்) வண்ணத்தில் அச்சிட்டு அட்டையை மெருகேற்றியுள்ளனர். இதனை ஒரு புரட்சி என்றே சொல்லலாம்.
விலை: ஆறு அணா. மொத்தப்பக்கங்கள்: 68 (அட்டைகள் நீங்கலாக). துரதிஷ்ட வசமாக என்னிடம் கடைசி அட்டையும், நான்கு பக்கங்களும் இல்லை.
முதல் புன்னகை என்ற தலைப்பில் ஓர் அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. அவசியம் படித்து பாருங்கள். அசந்து போவீர்கள்! (இறுதி பகுதி இல்லை, மன்னிக்கவும்)
இதழ் முழுவதும் தெளிவான படங்கள் அழகுற அச்சிடப்பட்டுள்ளன. இதழை முழுக்க படித்தால் வெளியீட்டாளர்களின் உழைப்பை புரிந்து கொள்ளலாம். தற்போது வெளிவரும் சில சிறுவர் இதழ்களின் தரத்தை, சித்திரங்களின் தெளிவை முதல் அம்புலிமாமவுடன் ஒப்பிடவே முடியாது. 61 ஆண்டுகளுக்கு முன்னரே அப்படி அசத்தியிருக்கிறார்கள்!
அன்றைய சந்தா விவரங்கள். சுவராஸ்யமாக இருக்கிறது அல்லவா?
சென்ற ஆண்டு அம்புலிமாமாவின் வைர விழா. 61 ஆண்டுகள் ஆனாலும் வடிவமைப்பில் பெரிதாக மாற்றம் ஒன்றும் இல்லை. உள்ளடக்கமும், இதழ் அளவும் சற்றே மாறியுள்ளது. வைர விழா சிறப்பிதழில் வெளியான ஆசிரியர் உரைகளை படியுங்கள். நிறையவே ஆர்வம் கொள்வீர்கள்; அம்புலிமாமாவை வாங்க ஓடுவீர்கள்!
சென்ற வார தினத்தந்தியின் 'சிறுவர் தங்க மலரில்' அம்புலிமாமாவின் 61 ஆண்டுகால சாதனையை குறிப்பிட்டுயிருந்தார்கள். (நன்றி: மன்னர் விஸ்வா) அதனையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
உங்களுடைய ஆர்வத்தை பொறுத்து அம்புலிமாமாவின் முதல் இதழின் பிறப்பகுதிகளை இனி வரும் இடுகைகளில் காணலாம்.
மன்னர் விஷ்வா ஜேம்ஸ் பாண்டுடன் மர்ம கோட்டைக்கு போய் வந்திருக்கிறார்.
அவருடைய அனுபவங்களை இங்கே காணலாம்.
மீண்டும் சந்திப்போம்...